கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை மொத்தம் மூன்று மாணவர்கள் மட்டுமே உயர்தரம் மூன்று தமிழ் மொழி மற்றும் இலக்கிய பாடத்தை (H3 TLL) எடுத்துப் பயின்றுள்ளனர் என்று கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இப்பாடம் இரண்டு தொடக்கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் பாடத்தை எடுத்து பயிலும் ஒரே மாணவி, ஆண்டர்சன் -சிராங்கூன் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த நந்தினி.
தொடக்கக்கல்லூரியில் உயர்தரம் 2 தமிழ் இலக்கியப் பாடத்தை பயின்ற இவர், தொடக்கக்கல்லூரி இரண்டாம் நிலைக்குச் சென்றபோது உயர்தரம் (H3) தமிழ்மொழி மற்றும் இலக்கிய பாடத்தைத் தனிப் பாடமாகவும் எடுத்து பயின்று வருகிறார். எதிர்காலத்தில் தமிழ் ஆசிரியராகவும் தமிழ் எழுத்தாளராகவும் ஆகவேண்டும் என்ற இலட்சியம் இவருக்கு உண்டு.
"தொடக்கக் கல்லூரிக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் உயர்கல்வி எடுத்ததால் தொடக்கக்கல்லூரியில் தமிழ்ப் பாடத்தைத் தேர்வுசெய்வதில்லை.
"பல ஆண்டுகளாக நிலைமை இப்படி இருந்தாலும் தமிழ் விருப்பப்பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த சில ஆண்டுகளில் உயர்தர தமிழ்ப் பாடங்களை முன்வந்து எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது," என்றார் ஆண்டர்சன்- சிராங்கூன் தொடக்கக்கல்லூரி தமிழ் ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன்.
தமிழ்மொழி விருப்பப்பாடம் பற்றிய தகவல்கள்:
தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் ஆண்டர்சன் - சிராங்கூன் தொடக்கக்கல்லூரி, தேசிய தொடக்கக்கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளில் தற்போது வழங்கப்படுகிறது.
தகுதி பெறும் மாணவர்கள் ஜிசிஇ சாதாரணநிலை தேர்வில் பின்வரும் தரங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்ற மாணவர்கள்: உயர் தமிழில் ≥ தரம் B3, உயர் தமிழில் ≥ தரம் B4 மற்றும் தமிழ் இலக்கியத்தில் ≥ தரம் B3, தமிழ்ப் பாடத்தில் தரம் ≥ A2, சாதாரணநிலை தேர்வு முடித்த மாணவர்கள், கூட்டுச் சேர்க்கை நடவடிக்கை வழியாகவோ நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கை வழியாகவோ தமிழ் மொழி விருப்பப்பாடம் வழங்கும் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த பள்ளிகளில் சேர 2 போனஸ் புள்ளிகளுக்கு அவர்கள் தகுதி பெறுவார்கள்.
தமிழ்மொழி விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள் உயர்தரம் 2 தமிழ் மொழி மற்றும் இலக்கிய பாடத்தைக் கட்டாயமாக எடுத்து பயிலவேண்டும்.
மாணவர்களுக்கு உயர்தரம் 3 தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடத்தையும் பயில வாய்ப்பு தரப்படும்.
சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழி தொடர்ந்து நிலைத்துவருகிறதை அரசு உறுதி செய்யும் அதே வேளை பல துறைகளில் தமிழ் மொழியில் திறன்மிக்கவர்களுக்கான தேவை இருந்துவருகிறது.
"அந்தத் துறைகளில் திறமையானவர்கள் பணியில் சேர நல்ல அடித்தளம் அமைவது சிறப்பு. அதற்கு இன்னும் பல மாணவர்கள் உயர்தரம் 3 தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பாடங்களை எடுத்து படிப்பது நல்லது," என்று கூறினார் தமிழ் மொழி ஆர்வலர் திரு கோவிந்தன் ராஜு.
"எனது பிள்ளைகளுக்குமே இந்த அறிவுரை பொருந்தும். முடிந்தவரை அவர்களைத் தாய்மொழி தமிழில் உயர்தரம் 3 பாடத்தை எடுக்குமாறு கூறுவேன். தமிழ்மொழி இந்நாட்டில் பல காலம் செழித்தோங்க அதற்கு நல்ல திறனாளர்கள் வேண்டும். மேலும் அரசு நல்ல வளங்களை உருவாக்கியுள்ள நிலையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்," என்று உயர்நிலைப் பள்ளியில் பயிலும் இரு மகள்களுக்குத் தந்தையான கோவிந்தன் கூறினார்.

