தமிழ் மொழிபெயர்ப்புகளை மேம்படுத்த திட்டம்

தமிழ் மொழிபெயர்ப்புகளை மேம்படுத்த திட்டம்

2 mins read
81503706-84ef-45e7-aebf-11faa308b11d
செய்தியாளர் கூட்டத்தில் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அரசாங்கத் தகவல்களின் மொழிபெயர்ப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து தங்கள் கருத்துகளை இந்திய, மலாய், சீன சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இதற்காக தொடர்ச்சியான மெய்நிகர் கலந்துரையாடல்கள் நடத்தப்பட உள்ளன.

கருத்துகளைக் கூறுவதுடன், பொதுமக்கள் மொழிபெயர்ப்பாளராகவும் மொழி பெயர்க்கப்பட்டவற்றைச் சரிபார்ப்பவராகவும் செயல்படவும் வாய்ப்புள்ளது.

மொழிபெயர்ப்புக்கும், மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களில் பிழைகளைக் கண்டறியவும் இன்னும் அதிகமான மொழிபெயர்ப்பு தொண்டூழியர்களை அரசாங்கம் ஈடுபடுத்தவுள்ளது என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார்.

இதன் வழி சரியான மொழிபெயர்ப்பை வழங்கும் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஆற்றலை மேம்படுத்த விரும்புகிறது என்றார் அவர்.

தொடர்பு தகவல் அமைச்சு வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மொழிபெயர்ப்பு விவகாரங்களுக்கு தீர்வு காண பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்துவது குறித்து அவர் விளக்கினார்.

இதுவரை மொத்தம் 88 மொழிபெயர்ப்பு தொண்டூழியர்களை அமைச்சு சேர்த்துள்ளது. இவர்களில் 13 பேர் தமிழ் மொழிக்கான தொண்டூழியர்கள்.

இதன் வழியாக அரசாங்க மொழிபெயர்ப்பு இணையச் சேவை எல்லா மொழிகளிலும் நல்ல முதல் கட்ட மொழிபெயர்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பு தேவைகள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்ட அமைச்சர், மாதத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு சராசரியாக 550 மொழிபெயர்ப்பு வேலைகளை அரசாங்கம் வழங்குகிறது.

அதிக அளவில் அரசாங்கத் தகவல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. அதிவேகச் சூழலில் நாம் இயங்குவதால், மொழிபெயர்ப்பு சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அமைச்சர் சிம் ஆன் சுட்டினார்.

பொதுச் சேவை அதிகாரிகள் பலரும் மொழிபெயர்ப்பு தகவல்களை வெளியிட்டால் அல்லது தாங்களே மொழிபெயர்ப்பில் ஈடுபடும் பட்சத்தில், நல்ல தரமான மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிலரை மட்டும் சார்ந்திருப்பதாக அன்றி பலரையும் சார்ந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார் அவர்.

தொடர்பு தகவல் அமைச்சு நல்ல மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தையும் அதன் தொடர்பில் தவிர்க்க வேண்டிய வி‌‌ஷயங்களையும் குறித்த விழிப்புணர்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்று திருவாட்டி சிம் ஆன் கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மொழிபெயர்ப்பு குறித்து அமைச்சர் பேசினார்.