செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் பயின்றதன் மூலம் தாம் இரண்டு முக்கியப் பாடங்களைக் கற்றுக்கொண்டதாக 27 வயது திரு வருண்மூர்த்தி நெடுஞ்செழியன் கூறினார். பள்ளி அவரினுள் கல்வி ஆர்வத்தை தூண்டியதோடு பல வாழ்க்கை பாடங்களை கற்றுத்தந்தது. இவையே தற்போது அவர் பெற்ற வெற்றிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் கைகொடுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பணியிடத்தில் அடிப்படை பொறுப்புகளை செய்து முடிக்க, உயர்நிலைப் பள்ளியில் கற்றுக்கொண்ட கணிதமும் இதர பாடங்களும் பேருதவி புரிந்ததாக அவர் கூறினார்.
பள்ளி ஆசிரியர்கள் தமக்குத் துணைபுரிந்த நாள்களை நினைவுகூர்ந்தார் திரு வருண். பாடத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் தெளிவுற விளக்கிய தம்முடைய உயிரியல் ஆசிரியர் திரு லிம், வரலாற்று ஆசிரியர் திரு டெரன்ஸ் ஆகியோர் தமக்கு ஊக்கமளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு முறைகூட எரிச்சலடையாமல் பாடத்தைத் தெளிவாகக் கற்பித்த திரு லிம், பாடத்தை உற்சாகமாக கற்றுக்கொள்ள புதுப்புது சலிப்பு தட்டாத வழிகளைக் கண்டறிந்து அறிமுகப்படுத்துவார். இக்காரணத்தால், திரு வருணின் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்தார்.
இதனால், பாடங்களை வெறும் தேர்வுப் பாடங்களாகப் பார்க்காமல் கதைகளாக பார்க்கும் அணுகுமுறையை அறிந்துகொண்டு தேர்வுகளிலும் திரு வருண் சிறப்பாகச் செய்தார்.
இதுபோன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகினால் மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து மேன்மேலும் வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக்கொண்டு அர்த்தமுள்ள கல்வி பயணத்தை வகுத்துக்கொள்ளலாம். அத்துடன், மாணவர்களுக்கு எந்த உதவி தேவையென்றாலும் அதை வழங்க ஆசிரியர்கள் அருகிலேயே இருப்பார்கள்.

