புதிதாக கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களின் மேற்கூரையில் சமூகத் தோட்டம் அமைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தொட்டித் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு இவ்வாய்ப்பு பயனுள்ளதாய் அமைகின்றது.
2021ஆம் ஆண்டு தியோங் பாரூவில் அமைக்கப்பட்ட ஒரு சமூகத் தோட்டத்தின் காய்கறிகளும் கீரை வகைகளும் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கே தரப்பட்டது. கத்தரிக்காய், காய்லான் கீரை, கங் கோங் கீரை என்று பல்வேறு வகையான காய்கறி, கீரை வகைகள் அத்தோட்டத்தில் விளைந்திருந்தன.
தோட்ட வேலைகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் தங்களின் பொழுதுபோக்கில் ஈடுபடுவதோடு குடியிருப்புப் பேட்டைக்குப் பசுமை சேர்க்கவும் செய்கின்றனர். மேலும், சக குடியிருப்பாளர்களுடன் நேரம் செலவழித்து நட்பை வளர்க்கவும் செய்கின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள பல சமூகத் தோட்டங்கள் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன. இவற்றில் தொண்டூழியம் செய்யவும் வாய்ப்புகள் உண்டு. இயற்கையில் ஆர்வம் உள்ளோர் தங்கள் நேரத்தை இது போன்ற இடங்களை பராமரிக்க செலவிடுகின்றனர்.
மக்கள் தங்களுடைய குடியிருப்பு பேட்டையில் உள்ள தோட்டத்தில் செடிகள் வளர்க்க குலுக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அடுக்குமாடி கட்டடங்களின் மேற்கூரையில் மட்டும் அல்லாது, சில பூங்காக்களில் குறிப்பிட்ட நிலப்பகுதியை வாடகைக்கு எடுத்தும் மக்கள் தங்கள் தோட்டத்து வேலைகளில் ஈடுபடலாம். பூங்காக்களுக்கு அழகூட்டுவதில் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்று உணரலாம்.
இது போன்ற சமூக தோட்ட முயற்சிகள் சிங்கப்பூரில் சமூகப் பிணைப்பை வலுப்படுத்த கைகொடுப்பவை. நீடித்த நிலைத்தன்மையை இம்முயற்சிகள் ஊக்குவிப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

