அதிகமான இளையர்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் போதிய ஈடுபாடு இல்லை என்பதை ஓர் அண்மைய ஆய்வு கண்டறிந்தது. உலகளவில் ஒப்பிடும்போது, சிங்கப்பூரில் குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டோர் போதிய அளவு உடற்பயிற்சி செய்வதில்லை என்றும் அது கண்டறிந்தது.
இன்றைய உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையை கருத்தில் கொள்ளும்போது இத்தகவல் கவலையூட்டுகிறது. ஆரோக்கியத்துடன் வாழவும் உடலைச் சீருடன் நோயின்றி வைத்திருக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
உடற்பயிற்சி செய்வதில் நாட்டம் இல்லாதவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு தம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் விதுர் காற்பந்து விளையாடுவதில் நாட்டம் கொண்டவர். சிறு வயதில் இருந்தே தன் நண்பர்களுடன் சேர்ந்து காற்பந்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட இவர், இந்த பழக்கத்தை இன்றுவரை கைவிடவில்லை.
இவரை போன்று, இளைஞர்கள் காற்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். சிலர் மிதிவண்டி ஓட்டுவது தங்களுக்கு பொழுதுபோக்காக இருப்பதால் அதையே உடற்பயிற்சியாக மேற்கொள்கின்றனர்.
வேறு சிலரோ கலைகளில் ஈடுபட்டு தம் உடலை கட்டுடன் வைத்துக்கொள்கின்றனர். நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் கொண்டோர் கலைப்பள்ளிக்கு சென்று பரதநாட்டியம், கதக், கிராமிய நடனம் முதலிய நடன பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அத்துடன் தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்வது உடல் உழைப்பில் ஈடுபட உதவுகின்றன.
இன்று இணையத்தில் ஆரோக்கியமாக இருக்க விரும்புவோருக்கு உடற்பயிற்சிக்கு அப்பால் ஈடுபடக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஏராளமான தகவல்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் பிடித்தமான நடவடிக்கை ஒன்று நிச்சயம் இருக்கும். அதை கண்டறிந்து சுலபமாக கிட்டும் ஆரோக்கிய குறிப்புகளைச் சாதகமாக பயன்படுத்தி சீரான வாழ்க்கை வாழலாம்.

