நீடித்த நிலைத்தன்மை பயண இலக்கு சான்றிதழ் பெற்ற முதல் நாடாகியுள்ளது சிங்கப்பூர். சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத சுற்றுப்பயண அனுபவத்தை நாடி வரும் பயணிகளுக்கு ஏற்ற தேர்வுகளை அமைக்க உள்ளது சிங்கப்பூர். சுற்றுப்பயணிகள் நிறைவாக நேரத்தை கழிக்க கூடுதல் நடவடிக்கைகளும் உருவாக்கப்பட உள்ளன.
அனைத்துலக நீடித்த நிலைத்தன்மை பயணத்துறை மன்றத்தின் தரநிலைகளை நம் சுற்றுப்பயணத்துறை எட்டியுள்ளதை அடுத்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.
பருவநிலை மாற்றங்களுக்கு எதிரான திட்டங்கள் விரிவாக்கம் காணும் சமயத்தில் வந்துள்ளது இந்த சான்றிதழ்.
சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு பயணிகளும்கூட நீடித்தநிலைத்தன்மை திட்டங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வழிவகுக்கும் சுற்றுப்பயணங்களை விரும்புகின்றனர் என்று சிஎன்ஏ செய்தி கண்டறிந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சில பண்ணைகள் தமது முயற்சிகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் நடைபயண நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
சமீப காலத்தில் சுற்றுப்பயணிகள் சுற்றுலாவின் போது பல்வேறு இடங்களுக்கு சென்று கண்டு களிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டில்லை. மாறாக, ஆழ்ந்த கற்றல் அனுபவங்களை அளிக்கும் பயணங்களாக அவை இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
குறிப்பாக பசுமை அனுபவங்களும் நடைப்பயணங்களும் மக்களை ஈர்க்கின்றன. சிங்கப்பூரில் ஏன் தண்ணீருக்கும் அதன் சேமிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை விளக்கும் நடைப்பயணங்கள், சிங்கப்பூரின் கடைசி "கம்பங்" கிராமத்து பகுதியை சுற்றி பார்ப்பது போன்றவை சுற்றுலா பயணிகளை சமீபத்தில் ஈர்த்து வருகின்றன.
புதிதாக பெறப்பட்ட இந்த சான்றிதழை முன்னிட்டு, செந்தோசாத் தீவு மேம்பாட்டு கூட்டுநிறுவனம் செந்தோசாவில் புது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளையும் தங்குவிடுதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. நீடித்த நிலைத்தன்மையை முக்கிய கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்படும் புதிய வசதிகள் செந்தோசாத் தீவு பகுதிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

