கிட்டத்தட்ட 500 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட இளைஞர்கள் கடும் வெயிலை பாராது சுத்தம் செய்தனர்.
இளைஞர்களிடையே கடலை சுத்தமாக வைத்துக்கொள்வதை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வை வளர்க்கவும் அமைப்பு இம்முயற்சியை எடுத்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு தம் எண்ணங்களை செயல்படுத்த இந்நடவடிக்கை வாய்பளித்ததாக "யூதோபியா" தளம் தெரிவித்தது.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 21 வயது மாணவன் சேவியர் முன்பு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயின்றபோது சுற்றுசூழல் குழுவின் தலைவராக இருந்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசிய சேவியர் தன் பேச்சை செயலில் காட்டும் வகையில் இந்த கடற்கரை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இவர்போல செயலில் இறங்க எண்ணிய பல இளைஞர்கள் இந்த நடவடிக்கை மூலம் நமது கடற்கரைகள் எவ்வளவு அசுத்தமாக உள்ளன என்பதை நேரில் கண்டனர். அதோடு, தேங்காய் ஓடுகள், கடல் பாசி போன்றவை எல்லாம் கடலிலே வீச கூடியவை என்றும் ஓட்டுமீன்களை தொந்தரவு செய்யாது இருக்கவேண்டும் என்றும் கற்றுக்கொண்டனர் இளைஞர்கள்.
சுத்தப்படுத்த வேண்டிய பகுதிகள் சில தூரமாய் இருந்ததால் பேருந்துகளில் சென்று சுத்தம் செய்தனர் இளைஞர்கள்.
சிரமங்களை தாண்டி, இந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருந்ததாக ஓர் இளைஞர் கூறினார். சுற்றுச்சூழல் மீது கவலை கொண்ட இளைஞர்கள் பலரை ஒரே இடத்தில கண்டு அவர்களுடன் உரையாடி நட்பை ஏற்படுத்திக்கொண்டது ஒரு நல்ல அனுபவமாக இருந்ததாய் தெரிவித்தனர்.

