சிங்கப்பூரின் புதிய இணைய விதிமுறைகளின்கீழ் ஃபேஸ்புக், டிக்டோக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் கூடிய விரைவில் மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.
தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகளிடமிருந்து இணையம் பயன்படுத்துவோரைப் பாதுகாக்கச் செயல்முறைகளை அவை கொண்டுவர வேண்டும். அதுமட்டுமின்றி, 18 வயதுக்கும் குறைவானோரைப் பாதுகாக்கக் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தகாத கருத்துகள், தேவையில்லாத தொடர்புகள் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ள இளையர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் உதவும் அம்சங்கள் இருப்பதைச் சமூக வலைத்தளங்கள் உறுதி செய்யவும் வேண்டும்.
ஆபத்தான செயல்களில் ஈடுபட மக்களைத் தூண்டும் காணொளிகள், இணையம்மூலம் நேரடியாக ஒளிபரப்படும் வன்முறைச் செயல்கள் போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தொடர்பு, தகவல் அமைச்சு கூறியது. இணையம்மூலம் ஏற்படக்கூடிய தீங்கினால் சிங்கப்பூருக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக அமைச்சு எச்சரித்தது.
பிற சமயங்கள், இனங்கள் ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகளை இணையம்மூலம் பரப்பிச் சிங்கப்பூரில் உள்ள மக்களிடையே பிளவு ஏற்படக்கூடும்.
இது குறித்து அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
"இணையப் பாதுகாப்பை மேம்படுத்த உலக அளவில் பலரும் குரல் எழுப்பி உள்ளனர். இணையம்மூலம் தீங்கு ஏற்படாமல் இருக்கப் பல நாடுகள் புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. சில நாடுகள் இத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன," என்று அமைச்சர் தெரிவித்தார்.
இணையப் பாதுகாப்பைப் பலப்படுத்தப் புதிய சட்டங்களைச் செயல்படுத்தியுள்ள நாடுகளுடனும், புதிய யோசனைகளை முன்வைத்துள்ள நாடுகளுடனும் சிங்கப்பூர் இணைந்து செயற்படுகிறது.

