தொண்டூழியம் நமது கடமை உணர்வைக் கூட்டுகிறது. அதோடு, பிறரை கவனித்துக்கொள்ளத் தேவையான பொறுப்புணர்வையும் அது மேம்படுத்துகிறது. இதனால் மக்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வழி பிறக்கிறது. சமூகப் பிணைப்பு வலுப்படும் வாய்ப்புகளும் உயர்கின்றன.
தொண்டூழியம் எப்போதோ யாரோ செய்யும் செயல்கள் மட்டுமல்ல. தொண்டூழியம் ஒட்டுமொத்த சிங்கப்பூர் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. நமது விழுமியங்களையும் போக்கையும் அது காட்டுகிறது.
சிங்கப்பூரில் நாம் எத்தகைய சமூகத்தை விரும்புகிறோம் என்பதையும் தொண்டூழியப் போக்கு பிரதிபலிக்கிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன் தொண்டூழியத்தில் ஈடுபட்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடுகூட கிடையாது என்றார் திரு வோங். ஆனால் 2016ல் அந்த விகிதம் 35 விழுக்காட்டுக்கு அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“ஆனால், கொவிட்-19 காரணமாக இது 22 விழுக்காட்டிற்குக் குறைந்து இருக்கிறது. இந்தக் குறைவு தற்காலிகமான ஒன்றுதான் என்று நம்புவோம். சிங்கப்பூரில் தொண்டூழியத்தின் இப்போதைய விகிதம் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இரண்டு மடங்குக்கும் மேலாகிவிட்டது,” என்று அவர் கூறினார்.
வெளிநாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் தொண்டூழிய விகிதம் நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்படலாம் என திரு வோங் தெரிவித்தார். சிங்கப்பூரில் தொண்டூழியத்தை வளர்க்க மூன்று வழிகளை துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் தொண்டூழியத்தில் ஈடுபட அரசாங்கம் தொடர்ந்து ஊக்கமூட்டும். சமூக அமைப்புகளுடன் சிங்கப்பூரர்களை இணைக்க அது உதவும். இதன்மூலம், சிங்கப்பூரர்கள் சமூக சேவை வாய்ப்புகளை எளிதாக அறியலாம். தேவையான அளவு தங்களின் நேரத்தையும் அவர்கள் ஒதுக்கலாம்.
இரண்டாவதாக, தொண்டூழியர்களை ஈடுபடுத்தும் நிறுவனங்கள் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார். நிறுவனங்கள் தொண்டூழியப் பணிகளைக் கவனமாக அமைக்க வேண்டும். அவற்றுக்கு ஆதரவும் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு நிறுவனங்கள் செயற்பட அரசாங்கம் மேலும் அவற்றுக்கு ஆதரவு வழங்கும் என்றார் திரு வோங். தொண்டூழியத் துறையில் அமைப்புகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு அரசாங்கம் மேலும் தளங்களை உருவாக்கும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.

