இளம் தலைவர்களை வளர்க்கும் சிண்டா

2 mins read
15fc2a57-6eb2-4819-a02f-b17bc13edb02
-

இளையர்களிடையே தலைமைத்துவப் பண்புகளையும் சேவை மனப்பான்மையையும் விதைக்கவும் தொடங்கப்பட்டது, ‘சிண்டா இளையர் தலைமைத்துவக் கருத்தரங்கு’. சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழக (சிண்டா) இளையர் மன்றத்தின் இந்நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. கொவிட்-19 சூழலால் ஈராண்டுகளுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டில் இந்நிகழ்வு மீண்டும் இடம்பெற்றது. 

பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். மூன்றூ நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் ஏறத்தாழ 50 பேர் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு குழு நடவடிக்கைகளில் பங்கேற்று தங்களில் திறன்களை பங்கேற்பாளர்கள் வளர்த்துக்கொண்டனர். 

முதல் முறையாகக் கடந்த ஆண்டின் கருத்தரங்கில் கலந்து கொண்டார் மாணவர் தஷ்வின் விஜயகுமார். இக்கருத்தரங்கு தனது கண்ணோட்டத்தை மாற்றியதாக அவர் கூறினார். பல்வேறு குடும்பப் பின்னணிகளிலிருந்து வந்திருந்த இளையர்களைச் சந்திக்க இந்நிகழ்வு வாய்ப்பளித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

“குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். அது பற்றி நான் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தேன். ஆனால், சிண்டாவின் கருத்தரங்கில் என்னைப் போன்ற பின்னணியிலிருந்து வந்திருந்த பல இளையர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் உரையாடியது எனக்கு ஊக்கமாக இருந்தது,” என்றார் அவர். 

முதல் நாளன்று, சுய புரிதலுக்கான வழிகாட்டுதலை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. குழுக் கலந்துரையாடல்களில் இத்தலைப்புகள் ஆராயப்பட்டன. 

-

இரண்டாம் நாளன்று, மாணவர்கள் சேவை புரிந்தனர். வெளிநாட்டு ஊழியர்கள், குறைந்த வருமானக் குடும்பங்கள் ஆகியோரை நேரடியாகச் அவர்கள் சென்று சந்தித்தனர். அதோடு, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டு தெரிந்துகொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் பெற்றனர்.

மூன்றாம் நாளில், இத்தகைய சமூக சிக்கல்களைத் தீர்ப்பதற்கு என்ன வழி என யோசித்தனர் மாணவர்கள். தாங்கள் அறிந்துகொண்ட பிரச்சினைகளைக் களைவதற்கான வழிமுறைகளை அவர் திட்டமிட்டனர். பின்னர், அவர்கள் அத்திட்டங்களை விரிவாக பிறரிடம் பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் அனைத்து மாணவர்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் பல யோசனைகளைக் கற்றுக்கொண்டனர். 

“இக்கருத்தரங்கு பள்ளி முகாம்களிலிருந்து வேறுபட்டிருந்தது. முழுமையான ஓர் அனுபவத்தைத் தர நாங்கள் முயற்சி செய்திருந்தோம். சுய பரிசீலனை, பிரதிபலிப்பு ஆகியவற்றுக்கும் ஒவ்வொருநாளும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளோம். வசதியோ வருமானமோ இல்லாத சூழ்நிலையிலும் சமூக சேவையில் ஈடுபடலாம் என்ற கருத்தையும் இந்த கருத்தரங்கு வலியுறுத்தியது,” என்றார், நிகழ்ச்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் சையட் அலி ஃபாத்திமா.