இறுதிச்சடங்கு சேவை துறையில் ஓர் இளையர் கால்பதிக்க விரும்புவது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று பலரும் கூறுவர். இது ஏழு வயதில் அனில் ஷாவுக்கு ஒரு கனவாகத் தொடங்கியது. இன்று தனது 20வது வயதில் அனில் ஷா முழுநேரமாக, சிங்கப்பூர் இந்தியர் இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார்.
தனது தொழிலைக் கொண்டு இவரை இழிவாகப் பார்த்தோர் பலர் என்று அனில் ஷா எங்களுடன் பகிர்ந்துகொண்டார். முஸ்லிமாகப் பிறந்து, இப்பொழுது கிறிஸ்தவராக மாறிய அனிலுக்கு, இளம் வயதில் பிற இளையர்
களைப் போல வெளியே செல்லவும் வாழ்க்கையை அனுபவிக்கவும் ஒரு நொடிகூட கிடைப்பதில்லை. உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது திடீரெனத் தொலைபேசி அழைப்பு வந்தால் மருத்துவமனைக்கு அல்லது இறந்தவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் அனில்.
சிறுவயதில் குடும்பத்தாரோடு ஓர் இறுதிச்சடங்கிற்குச் சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற இறுதிச்சடங்குகள் அனிலின் கவனத்தை ஈர்த்தன. அனில் இறுதிச்சடங்குகளைச் செய்துகொண்டிருந்தவர்களிடம் மேலும் தகவல் கேட்டு அறிந்துகொண்டார்.
எதிர்காலத்தில் இத்துறையில் பணிபுரிய வேண்டும் என்று தீர்மானித்த அனில், 13 ஆண்டுகளுக்குப் பின் அதே வேட்கையுடன் இருக்கிறார். ஒரு நாளில் 200 கிமீ தூரம் வரை வாகனத்தை ஓட்டிச்செல்கிறார் இவர். இறுதிச்சடங்குகளுக்கும் மண்டாய் தகனச்சாலைக்கும் சாம்பல் காப்பகத்திற்கும் செல்லும் இவர், தினமும் நான்கு மணி நேரம் தூங்குவதுகூட குறைவு.
தமது 'ஓ' நிலைத் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன், அனில் சிங்கப்பூர் இந்தியர் இறுதிச்சடங்கு சேவையுடன் வேலைப்பயிற்சி மேற்கொள்ள விரும்பினார். இவரின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அந்நிறுவனத்தார், அனிலுக்கு வாய்ப்பளித்தனர். மாதம் $600 சம்பளத்துடன் இந்து சமயத்தின் இறுதிச்சடங்குகளை அனில் துரிதமாகக் கற்றுக்கொண்டார்.
நான்கு மாத வேலைப்பயிற்சி, அனிலுக்கு பல்வேறு அனுபவங்
களைத் தந்தது. ஒவ்வொரு சடங்கையும் முறைப்படி தெரிந்துகொள்வது, அஸ்தியைக் கடலில் கரைப்பது, நீண்டநாள் அனுபவம் பெற்ற சக ஊழியர்களுடன் நட்
புறவை வளர்த்துக்கொள்வது என அனைத்தையும் ஈடுபாட்டுடன் செய்தார் அனில்.
இத்துறையில் ஆக இளைய ஊழியராக இருக்கும் இவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒத்த வயது நண்பர்களோடு தன் நேரத்தைச் செலவிடாமல் போவதுண்டு. இதனால் நண்பர்களுக்கு எரிச்சல் உண்டானாலும் அனிலின் விருப்பத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
அனிலின் பெற்றோரும் அவரின் 13 வயது தம்பியும் அனில் தொடர்ந்து தன் பணியில் வெற்றிநடை போட ஊக்கமளித்து வருகிறார்கள். உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, தற்போது சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னிலக்க ஊடகத் துறையில் பட்டயக் கல்வியை மேற்கொண்டு வரும் அனில், இரண்டு முறை பாடங்களில் தேறவில்லை.
ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் பிணவறை ஆராய்ச்சித் துறையில் இளங்கலைப் பட்டம் மேற்கொள்ளும் வாய்ப்பு தனக்குக் கிட்ட வேண்டும் என்று விரும்புகிறார் இவர்.
படிக்கும் காலத்திலும் தன் வேலைக்கு முன்னுரிமை தரும் அனில், "இந்த வேலையில் நான் அமைதி காண்கிறேன். பிறர் என்னை இழிவாகப் பேசினாலும் அதைப் பொருட்படுத்தாமல் என் வேலையைச் சிறப்பாகச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன்," என்று கூறுகிறார்.
தன் வேலையில் கிடைக்கும் புதுப்புது அனுபவங்களை நினைவுகூர்ந்த அனில், இறந்த குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோருக்கு இறுதிச்சடங்குகள் செய்வது தன் மனதை வெகுவாக பாதிப்பதாகக் கூறினார். அதுமட்டுமல்ல, ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 120 இறுதிச்சடங்குகள் இருந்தால், அவற்றில் 10 முதல் 20 சடங்குகள், பிள்ளை
களால் கைவிடப்பட்ட வயதானவர்களுக்காக நடப்பவை என எங்களிடம் வருத்தம் கலந்த குரலில் தெரிவித்தார் அனில்.
இவர் அவ்வப்போது கிறிஸ்துவ சமய இறுதிச்சடங்குகளையும் செய்துள்ளார். சில சமயங்களில் இறந்தவரின் குடும்பத்தினர் சில சடங்குகளுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது அனிலுக்கு சவாலாக இருந்தாலும், "இது அனைத்தும் என் ஒருநாள் வேலையில் அடங்கும்," என்று சாதாரணமாகக் கூறினார்.
"ஓர் இளையர், இத்துறையில் சிறந்து விளங்க முடியுமா என்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக அனில் திகழ்கிறார். இவரின் கட்டொழுங்கும் வேலை செய்யும் விதமும் நாங்கள் பெருமையடையும் விதமாக உள்ளன," என்றார் 14 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கும் சக ஊழியர் ஆனந்த் பாபு, 32.
எதிர்காலத்தில் இதே துறையில் சொந்த நிறுவனம் ஒன்றைத் தொடங்க விரும்புகிறார் இந்த இளையர்.

