ஊழியர்களுடன் தீபாவளியை வரவழைத்த கட்டுமான நிறுவனம்

ஊழியர்களுடன் தீபாவளியை வரவழைத்த கட்டுமான நிறுவனம்

2 mins read

நிறுவனத்தில் பணிபுரியும் 30 ஊழியர்களுக்குத் தீபத்திருநாளை முன்னிட்டு இலவசப் புத்தாடையையும், மதிய உணவையும் வழங்கியுள்ளது ஹன்ஷிகா என்ஜினீயரிங் & கோண்ஸ்டிரக்க்ஷன் Pte Ltd (Hanshika Engineering & Construction).

ஜாலான் ஹிக்காயாட்டில் இருக்கும் தனியார் வீடு ஒன்றில் ஊழியர்களுக்குத் தங்கும் வசதி அமைத்துத் தந்த இந்நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் ஊழியர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறது. .

2015ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், வாகன ஓட்டுநர்கள், பொறியாளர்கள், கட்டுமானம் என பலதரப்பட்ட துறைகளில் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களின் கடுமையான உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்குத் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன, நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு தலா ஒரு பவுண்டு தங்கமும், நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்த ஊழியர்களுக்கு $100 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

தீபாவளிக்காக இந்தியாவவுக்குச் செல்ல இயலாத ஊழியர்கள் சிலருக்கு, ஒரு குடும்பமாக இணைந்து அவர்களுக்குத் தீபாவளி உணர்வை நிறுவனம் கொண்டு சேர்க்கிறது. இன்று மதியம் ஆரம்பித்த கொண்டாட்டத்தில் ஊழியர்கள் புதிய வேட்டி சட்டையை அணிந்துக்கொண்டு, நிறுவன தலைவரும் அவருடைய குடும்பத்தினருடனும் மத்தாப்புக் கொளுத்தி தீபாவளியை ஆனந்தமாக வரவழைத்தார்கள்.

மதிய விருந்தில் கலந்துகொண்டு கொண்டாட்டத்தைப் பற்றி பகிர்ந்துக்கொண்ட நிறுவன தலைவரின் மனைவி திருமதி மாலதி ராஜபாண்டியன், 39, "ஈராண்டுகளாக கிருமித்தொற்றுக் காரணமாக எங்கள் ஊழியர்களுக்குச் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. வெறும் உணவை மட்டும் அவர்களுக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் இம்முறை எந்த கட்டுப்பாடுகளுமின்றி தீபாவளியை நாங்கள் ஊழியர்களோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறோம். அவர்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவரை போல தான்" என்றார்.

"தீபாவளிக்காக இந்தியாவுக்குச் செல்லமுடியவில்லை என்பதில் வருத்தமாக இருந்தாலும், ஒரு குடும்பமாக மற்ற ஊழியர்களுடன் இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டது என் மனதுக்கு இன்பமாக இருக்கிறது" என்று பகிர்ந்துக்கொண்டார் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த பொறியாளர் திரு ராமலிங்கம் பாண்டித்துரை, 31.