சுரங்கப்பாதையில் தீயணைப்பு முறை முடுக்கிவிடப்பட்டது

சுரங்கப்பாதையில் தீயணைப்பு முறை முடுக்கிவிடப்பட்டது

1 mins read

மரினா கரையோர விரைவுச்சாலையில் கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதையில் தீயணைப்பு முறை இன்று (செப்டம்பர் 7) பிற்பகல் முடுக்கிவிடப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலையில் ஃபோர்ட் ரோடு வெளிச்சாலை அருகே பிற்பகல் 12.55 மணியளவில் 'ஸ்ப்ரிங்க்ளர்' தீயணைப்பு முறை தானாக முடுக்கிவிடப்பட்டதாக ஆணையம் கூறியது.

சுரங்கப்பாதையில் தீ ஏற்படவில்லை என அது சொன்னது.

அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொளிகள் காட்டின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிற்பகல் 1 மணிவாக்கில் அங்கு தண்ணீர் தெளிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக ஆணையம் கூறியது. அதன் பின்னர் போக்குவரத்து வழக்கம்போல தொடர்ந்தது.

Watch on YouTube