பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாவதையடுத்து முதற்கட்டமாக 1,070 இயந்திரங்கள், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வைக்கப்படவுள்ளன.
பல்பொருள் அங்காடிகள், உணவங்காடிகள் எனப் பல்வேறு இடங்களில் வைக்கப்படவுள்ள இந்த இயந்திரங்கள் இருக்குமிடங்களைக் கண்டறிய ‘ரிடர்ன் ரைட்’ எனும் இணையத்தளமும் அறிமுகம் கண்டுள்ளது.
புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு வீவக வீடுகளிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து இத்தகையதொரு இயந்திரம் இருக்கும் இடத்துக்குச் சென்றுவிட முடியும்.
இந்த இணையத்தளம் புதன்கிழமையிலிருந்து செயல்படத் தொடங்கும். அடுத்தடுத்த கட்டங்களில் நிறுவப்படவிருக்கும் மேலும் 160 இயந்திரங்களின் இருப்பிடங்களையும் அதில் காணமுடியும். இயந்திரங்களின் கொள்ளளவு, இயங்கும் நேரம் ஆகியவற்றையும் இந்த இணையத்தளம் மூலம் அறியலாம்.
பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்துக்கான அமைப்பு, அனைத்துலகக் கழிவுகள் மறுபயனீட்டு நாளான மார்ச் 18 ஆம் தேதியன்று இந்த இணையத்தளத்தை அறிமுகம் செய்தது.
ஒன் பொங்கோல் வளாகத்தில் நடைபெற்ற ஊடகங்களுக்கான இயந்திரப் பயன்பாட்டு விளக்க நிகழ்ச்சியில், “மக்கள் பல்வேறு கலன்கள், போத்தல்களைக் கொடுத்து 10 காசு பெற நினைப்பார்கள். ஆனால், இதற்கென ஒட்டப்பட்ட தனிப்பட்ட ஒட்டுவில்லைகள் அல்லது குறியீடுகளைக் கொண்ட கலன்களை மட்டுமே திருப்பிக் கொடுக்க முடியும்,” என்றார் இவ்வமைப்பின் தலைமை நிர்வாகி ஸ்டெஃபனி யிப்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, பொதுமக்களிடையே மறுபயனீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்புகளைச் சமூகக் குழு, லாப நோக்கற்ற அமைப்புகள் ஆகியவை ஆராய்வதாகச் சொன்னார்.
மறுபயனீடு, மறுசுழற்சி விகிதங்களை அதிகரிப்பதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறிய திரு ஜனில், குப்பைக் கிடங்குகளைக் குறைப்பதிலும், அடுத்த தலைமுறை உணவு, பானக் கொள்கலன்களுக்கான மூலப்பொருளை வழங்குவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து, இயந்திரப் பயன்பாடு, இத்திட்டத்தில் பங்குபெறும் அங்காடிகள், உணவுக்கடைகளின் மாதிரிக் கட்டணச் சீட்டு உள்ளிட்ட விளக்கங்களை அவர் கேட்டறிந்தார்.

