சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
மே 10ஆம் தேதிமுதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 12,700 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்திய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,000ஆக இருந்தது என்று தொற்றுநோய்கள் தடுப்பு அமைப்பு (சிடிஏ) வியாழக்கிழமை (மே 21) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் கொவிட்-19 தொற்று பாதிப்பிற்காக நாளொன்றுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் சராசரி எண்ணிக்கையும் 56லிருந்து 73ஆக உயர்ந்தது.
அத்தொற்றால் சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
கொவிட்-19 தொற்று அதிகரிப்பைப் பொது மருத்துவமனைகளால் சமாளிக்க முடியும் என்று ‘சிடிஏ’ தெரிவித்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பைக் கண்காணித்து வருவதாகவும் அவ்வமைப்பு கூறியது.
மற்ற சுவாசப் பிரச்சினைகளைப் போலவே, ஆண்டு முழுவதும் அவ்வப்போது கொவிட்-19 தொற்று அலையும் எதிர்பார்க்கப்படுவதாக அவ்வமைப்பு குறிப்பிட்டது.
மக்களின் நோயெதிர்ப்பாற்றல் குறைந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால் கொவிட்-19 தொற்று அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது என்பி.1.8.1. என்ற கொவிட்-19 திரிபு சிங்கப்பூரில் அதிகம் பரவி வருகிறது. உள்ளூரில் கொவிட்-19 தொற்றியோரில் பாதிக்கு மேற்பட்டோர் அத்திரிபால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போதுள்ள கொவிட்-19 தடுப்பூசியே அத்திரிபுக்கு எதிராகத் திறம்படச் செயலாற்றும் என்று தொற்றுநோய்கள் தடுப்பு அமைப்பு தெரிவித்தது.

