ஈரான் போர்ப் பதற்றம் தொடங்கியதுமுதல் கிட்டத்தட்ட 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூர் வந்து சேரவேண்டிய 61 விமானங்களும் அதேபோல சிங்கப்பூரிலிருந்து மத்திய கிழக்கு வட்டாரத்திற்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய 66 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக குழுமம் கூறியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை (மார்ச் 7) இங்கிருந்து மத்திய கிழக்கிற்குப் புறப்பட வேண்டிய பத்து விமானங்களும் அங்கிருந்து வரவேண்டிய ஒன்பது விமானங்களும் ரத்து செய்யப்படக்கூடும் என்று குழுமத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டிய 1,400 பயணிகள் பாதிக்கப்படலாம் என்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிவாக்கில் அவர் தெரிவித்தார்.
போர்ப்பதற்றம் நீடிப்பதால் ஞாயிற்றுக்கிழமையும் இதேபோல பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படக்கூடும் என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஈரான்மீது தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28 (சனிக்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வரை, சிங்கப்பூரிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒன்பது என்ற விகிதத்தில் ரத்து செய்யப்பட்டன.

