புதிய பொழுதுபோக்கு வசதிகள், சக்கர நாற்காலிக்குத் தேவையான சரிவுப் பாதை வசதி போன்றவற்றை 32 தனியார்க் குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்போர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இவற்றில் அதிக அளவில் முதியோர் வசிக்கும் ஏழு குடியிருப்புப் பேட்டைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு முதியோருக்கு வழிகாட்ட உதவும் அம்சங்கள் போன்ற அவர்களுக்கு நட்பார்ந்த வசதிகளுடன் சமூகத் தோட்டங்களும் இருக்கும்.
குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வரும் இந்த மேம்பாட்டுப் பணிகள், $135 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் என்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ விளக்கினார்.
இந்தக் குடியிருப்புப் பேட்டைத் திட்டம், 2000ஆம் ஆண்டு பழைமையான குடியிருப்புப் பேட்டைகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நகர மன்றச் சேவை, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்குக் கிடைக்கும் மானியங்கள் போன்றவை இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுக்கு அந்தந்தத் தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்போர் எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதியோர் அதிகமாக உள்ள ஏழு குடியிருப்புப் பேட்டைகளின் மேம்பாடு, 32 தனியார் குடியிருப்புப் பேட்டைளின் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அமைச்சு விளக்கியது.
ஃபெங்ஷான், ஹில்வியூ, ஹோங் லியோங் கார்டன்ஸ், பாசிர் பாஞ்சாங், மெக்பர்சன் கார்டன்ஸ், மேஃபேர் பார்க், டீச்சர்ஸ் ஹவுசிங், தாம்சன்-இயூ லியான் பார்க் ஆகியவையே அந்த ஏழு குடியிருப்புப் பேட்டைகள். இவற்றுக்கான மேம்பாட்டுப் பணிகளுக்கு $11 மில்லியன் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குடியிருப்புப் பேட்டைகள் மூத்த குடிமக்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாகவும் அவர்களின் பாதுகாப்பை உயர்த்தும் விதமாக அவர்களுக்குத் தேவையான நட்பார்ந்த வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று திரு டெஸ்மண்ட் லீ விளக்கினார்.