லோயாங் அவென்யூவில் சனிக்கிழமை (ஜூலை 20) நிகழ்ந்த லாரி-பேருந்து விபத்தில் காயமுற்ற 13 லாரி பயணிகளும் ஒரு பேருந்துப் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தெலுக் பாக்கு சாலையை நோக்கிச் செல்லும் லோயாங் அவென்யூவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 6.35 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
29 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்ட 13 லாரி பயணிகளும் அந்தத் தனியார் பேருந்தில் இருந்த 50 வயது ஆடவர் ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை சொன்னது.
எழுவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் எஞ்சிய எழுவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்துக்குப் பிந்திய நிலவரத்தைக் காட்டும் காணொளி ஒன்று Singapore Roads Accident.com ஃபேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.
பேருந்தை ஓட்டிய 43 வயது ஆடவர் ஒருவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது. விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.