சட்டவிரோதமாகக் கடன் வழங்கியது, மோசடி உள்ளிட்ட 2,600 சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 508 பேரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது.
அச்சம்பவங்களுடன் தொடர்புடைய தொகையின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $14.3 மில்லியன்.
பத்து நாள் அமலாக்க நடவடிக்கைகளின்போது அவர்கள் பிடிபட்டனர். அவர்கள் 14 முதல் 71 வயதிற்குட்பட்டவர்கள்.
அவர்களில் 360 பேர் பிடோக் வட்டாரக் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மின்வணிகம், முதலீடு, வேலை, தொழில்நுட்ப ஆதரவு, இணையவழி ஏமாற்று, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் 148 பேர் கடன் மோசடி, கடன்முதலை நடவடிக்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த 508 பேரில், 57 பேர் சட்டவிரோதக் கடன் நடவடிக்கைகளுக்காகவும் ஏமாற்றுக் குற்றங்களுக்காகவும் கைதாகியுள்ளனர்.
மோசடிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் www.scamalert.com.sg என்ற இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடித் தடுப்பு அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
அத்தகைய மோசடி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் 1800-255-0000 என்ற எண் வழியாக அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கம் வழியாகத் தகவல் தெரிவிக்கலாம்.