வாடிக்கையாளர்கள் கடனுக்குத் தகுதியானவர்களா என்பதை சரிபார்க்க பல தரவுத்தளங்களைத் தேடும் பணி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட்டின் வாடிக்கையாளர் உறவு மேலாளர்களுக்கு விரைவில் எளிமைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த சில மாதங்களில் இந்த வாடிக்கையாளரின் கட்டணம் செலுத்தும் அளவுகளை, நாணயம் மற்றும் கட்டணம் செலுத்தும் கட்டமைப்பு வாரியாகப் பிரித்துக் காட்டுங்கள்,” என்று அவர்கள் செயற்கை நுண்ணறிவு சாட்போட்டிடம் கோர முடியும்.
வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன் பெற முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கான தகவல்களைப் பெற, தற்போதைக்கு இந்த வாடிக்கையாளர் உறவு மேலாளர்கள் பல தரவுத்தளங்களை அவர்களாகவே முன்நின்று அணுக வேண்டியுள்ளது.
ஆனால், நிதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்காக ஸ்டான்டர்ட் சாட்டர்ட் மற்றும் சிங்கப்பூரின் ஏஸ்டார் இடையிலான மூன்றாண்டு பங்காளித்துவம், இந்த செயல்முறையை எளிதாக்கும் என நம்பப்படுகிறது.
இந்தப் பங்ளாளித்துவத்தின்கீழ், இரு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட வங்கியியலுக்கான செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்க ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவுவதற்கு ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும், ஏஸ்டார் உயர் செயல்திறன் கணினி நிறுவனமும் இணைந்து மொத்தம் $15 மில்லியனை முதலீடு செய்யும்.

