உரிமம், காப்புறுதி இன்றி மோட்டார்சைக்கிள் ஓட்டிய 15 பேர் பிடிபட்டனர்

உரிமம், காப்புறுதி இன்றி மோட்டார்சைக்கிள் ஓட்டிய 15 பேர் பிடிபட்டனர்

1 mins read
c9a158d1-bf4e-4a6a-9eef-ad84651b0c49
கடந்த ஜூன் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கிட்டத்தட்ட 280 மோட்டார்சைக்கிளோட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

அட்மிரல்டி ரோடு வெஸ்ட் பகுதியில் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், உரிய ஓட்டுநர் உரிமமும் வாகனக் காப்புறுதியும் இன்றி மோட்டார்சைக்கிள் ஓட்டிய 15 பேர் பிடிபட்டனர்.

அவர்கள் 24 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள்.

போக்குவரத்துக் காவல்துறை, தேசியச் சுற்றுப்புற வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை இணைந்து அந்தக் கூட்டுச் சோதனையை நடத்தின. அதில், கிடத்தட்ட 280 மோட்டார்சைக்கிளோட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாகனத்தில் அதிக ஒலியெழுப்பியதற்காக 20 பேருக்குச் சுற்றுப்புற வாரியம் அபராதம் விதித்தது. மேலும், முறையற்ற உரிமத் தகடுகள், சாலை வரியைப் புதுப்பிக்கத் தவறியது போன்ற 16 விதிமீறல்களை நிலப் போக்குவரத்து ஆணையம் கண்டறிந்தது.

முறையான நுழைவு அனுமதி இல்லாத ஒரு வெளிநாட்டு மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

செல்லத்தக்க ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டினால் $10,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுவோர்க்கு $1,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

விதிமுறைகளை மீறும் வெளிநாட்டு வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுமெனக் காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்