ஈப்போ: மலேசியாவின் ஈப்போ நகரில் சனிக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாலை நேரத்தில் 15 வாகனங்கள் விபத்தில் சிக்கின. அதில் மூன்று இளையர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
விபத்துச் சம்பவம் ஜாலான் ஜெலாப்பாங்-அம்பாங் சாலையில் நிகழ்ந்தது. விபத்தில் 12 மோட்டார் சைக்கிள்கள், மூன்று கார்கள் சிக்கின.
மாண்ட மூவரும் மோட்டார் சைக்கிளோட்டிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து அதிகாலை 3.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹம்மது நஜிப் ஹம்ஸா கூறினார்.
விபத்தில் தொடர்புடைய 15 வாகனங்களும் மேருவிலிருந்து தம்புன் நோக்கிச் சென்று கொண்டிருந்தன என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
“19 மற்றும் 20 வயதுடைய இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. காயமடைந்த 19 முதல் 25 வயதுக்குட்பட்ட மற்ற 10 பேர் சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்,” என்று திரு ஹம்ஸா தெரிவித்தார்.
பின்னர், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளைஞர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய மூன்று கார் ஓட்டுநர்களும் காயமின்றித் தப்பினர்.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 41(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
