செம்பவாங் டிரைவில் உள்ள புளோக் 409 நான்காவது மாடி வீட்டில் சனிக்கிழமை (ஏப்ரல் 29) பிற்பகல் சுமார் 1.45 மணிக்குத் தீ மூண்டது. சுமார் 150 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டதால் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தீ மூண்ட வீட்டின் படுக்கையறை அதிகம் சேதம் அடைந்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீ விபத்து பற்றி இந்தப் படை புலன்விசாரணை நடத்தி வருகிறது.
தீ மூண்ட வீட்டில் பணிப்பெண்ணையும் சேர்த்து ஐவர் வசித்து வந்ததாகவும் தீ மூண்டபோது பணிப்பெண் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் ஷின் மின் நாளிதழ் குறிப்பிட்டது. அந்தப் பணிப்பெண் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.