சிங்கப்பூரில் ஊழல், மோசடிக் குற்றங்களுக்காக ஜனவரி 29ஆம் தேதி 16 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
‘பிரிட்டிஷ் கவுன்சில்’, ‘ செஃபோரா ஏசியா’, ‘ஃபெய் சியோங்’ உணவு நிர்வாகம், எஸ்எம்ஆர்டியின் வர்த்தகக் கிளையான ‘ஸ்டெல்லர் லைஃப்ஸ்டைல்’, ‘கம்ஃபர்ட்டெல்குரோ’வின் விளம்பரக் கிளையான ‘மூவ் மீடியா’ ஆகியவற்றின் ஊழியர்களும் அவர்களில் அடங்குவர்.
விளம்பர நிறுவனங்களான ‘சேனல்பைட்ஸ்’, சேனல்லிங்க்’, ‘மல்டிவெர்ஸ் மீடியா’ ஆகியவற்றில் பங்குதாரராக இருக்கும் 38 வயது சூ ஸிபிங்கிடமிருந்து ரொக்கக் கடன்களாக $160,000ஐ லஞ்சமாகப் பெற்றதாக ‘மூஃப் மீடியா’வின் கலை இயக்குநராக இருக்கும் 61 வயது லோ லீ சூன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
‘மூவ் மீடியா’வுடனும், ‘கம்ஃபர்ட்டெல்குரோ’வுடனும் தங்களின் வர்த்தக நோக்கங்களை நிறைவேற்ற, அந்த மூன்று விளம்பர நிறுவனங்களின் இயக்குநராக இருக்கும் 53 வயது ஜேன் ஹொங் ஹோ சுன்னுடன், சூ இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
லோ, சூ, ஹொங் ஆகிய மூவரையும் விசாரித்தபோது, மேலும் 13 பேர் சம்பந்தப்பட்ட குற்றங்களைக் கண்டுபிடித்ததாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு, அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
முகம்மது ஃபௌஸி அப்துல் ரஹ்மான், 41, லீ லியென் ஹியாங், 55, டான் ஹான் லியோங், 44 ஆகியோரும் அவர்களில் அடங்குவர். 16 பேரும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அபராதமும் மூவாண்டுவரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

