கிட்டத்தட்ட ஈராண்டுகளில் முதல்முறையாக செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் மத்தியப் பகுதி கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு வழிபாட்டுச் சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
வழிபாட்டுச் சேவை தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, இரவு 8 மணியிலிருந்தே கட்டடத்திற்குள் செல்ல மக்கள் வரிசைப்பிடித்துக் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தேவாலயத்தின் மத்தியப் பகுதியில் ஏறத்தாழ 500 பேர் மட்டுமே கூடியிருக்கமுடியும். இருப்பினும் கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு நடைபெற்ற வழிபாட்டுச் சேவைக்காக சுமார் 1,400 பேர் அங்குச் சென்றிருந்தனர்.
1861ஆம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயத்தின் மத்தியப் பகுதி 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து விரிவான மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. சாயம் பூசுவது, மின்சார வேலைப்பாடுகள், மின்னல் பாதுகாப்புக்கான பொருத்தும் பணிகள், துப்புரவுப் பணிகள் ஆகியவை மறுசீரமைப்புப் பணிகளில் அடங்கும்.
முன்னதாக இந்தப் பணிகளுக்குச் சுமார் $6 மில்லியன் செலவாகும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
1973ஆம் ஆண்டில் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த தேவாலயம் சிங்கப்பூரில் ஆகப் பழைமையான ஆங்கிலிக்க வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.
சிங்கப்பூரில் 75 இடங்கள் தேசிய நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.