துவாஸ் சோதனைச்சாவடியில் 18,400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
2025 செப்டம்பர் 1க்குப் பிறகு இதுவே ஆக அதிகம்; மலேசியர் கைது
aeb7c383-3345-41e6-89b5-b39490d08b68
கைதுசெய்யப்பட்ட ஆடவரும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் மேல்விசாரணைக்காகச் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். - படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

லாரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18,400க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் அதுதொடர்பான 1,400 பாகங்களும் துவாஸ் சோதனைச்சாவடியில் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) கைப்பற்றப்பட்டன.

மின்சிகரெட் புழக்கத்திற்கு எதிராக 2025 செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் கடுமையான தண்டனைகள் நடப்பிற்கு வந்துள்ளன.

அதன்பிறகு சிங்கப்பூரின் நிலவழி சோதனைச்சாவடிகளில் பிடிபட்ட கடத்தல் மின்சிகரெட்டுகளைப் பொறுத்தவரை இதுவே ஆக அதிகம் என்று செவ்வாய்க்கிழமை ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் வழியாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 7 மணியளவில் சோதனைச்சாவடியை அடைந்த அந்த லாரிமீது சந்தேகம் கொண்ட ஐசிஏ அதிகாரிகள், அதனை மேம்பட்ட சோதனைகளுக்காக அனுப்பிவைத்தனர்.

சோதனையில் அவ்வாகனத்தில் மின்சிகரெட்டுகளும் அது தொடர்பான பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் மலேசிய ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட பொருள்களும் அந்த ஆடவரும் மேல்விசாரணைக்காகச் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எட்டோமிடேட் போன்ற வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்ட மின்சிகரெட்டைப் போதைப்பொருளாக வகைப்படுத்தி, அப்புழக்கத்திற்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கி, அதனை ஒழிக்க சிங்கப்பூர் அரசாங்கம் முழுமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மின்சிகரெட் புழக்கத்திலிருந்து விடுபட விரும்புவோர் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் 1800-438-2000 எனும் விடுபாட்டு எண்ணைத் (QuitLine) தொடர்புகொண்டு உதவிகோரலாம்.

குறிப்புச் சொற்கள்