பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சரக்கு கொள்கலன் ஒன்றில் அறிவிக்கப்படாமல் 192 மதுபான போத்தல்கள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொள்கலன்களை வருடி நிலையத்தில் சோதனை செய்தபோது அவை சிக்கின.
மதுபானங்கள் கொள்கலனில் இருந்த பொருள்களுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மே 10ஆம் தேதி சரக்கு கொள்கலன்களில் சோதனை செய்தபோது இவை சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று மே 1ஆம் தேதி துவாஸ் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் போலியான 132 விலை உயர்ந்த கைகடிகாரங்களும் 18 மதுபான போத்தல்களும் பிடிபட்டன.
மே 16 தஞ்சோங் பகார் வருடி நிலையத்தில் சரக்கு கொள்கலன்களில் சோதனை செய்தபோது அறிவிக்கப்படாமல் 990 திறன்மிகு கைகடிகாரங்கள் சிங்கப்பூருக்குள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
பிடிபட்ட பொருள்கள் சரக்கு கொள்கலன்களில் யாருக்கும் தெரியாத வகையில் மறைக்கப்பட்டிருந்தன.
மூன்று சம்பவங்களையும் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.