சிங்கப்பூரில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் இவ்வாண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரயிறுதியில் ஏற்றங்கண்டுள்ளன.
மார்ச் 2,3,4ஆம் தேதிகளில் இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்டின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
காலாங்கில் 60,000 பேர் அமரக்கூடிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் அவரது ஆறு கலைநிகழ்ச்சிகளால், சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெய்லர் சுவிஃப்டின் மற்ற மூன்று கலைநிகழ்ச்சிகள் மார்ச் 7,8,9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
சில இடங்களில், குறிப்பாக புகிஸ், ஜாலான் புசார், ரோச்சோர் பகுதிகளில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் 100 விழுக்காடு அல்லது அதற்கும் மேல் கூடியிருப்பதாக மார்ச் 3ஆம் தேதி அதிகாலையில் ஹோட்டல் முன்பதிவுத் தளங்களிலிருந்து தெரியவந்தது.
ஆக விலையுயர்ந்த கட்டணத்தைக் கொண்டிருந்தது, ‘ஆர்டன் புட்டிக்’. அங்கு ஒரு ஞாயிறு இரவு தங்குவதற்கான கட்டணம், $1,320.
எதிர்பார்க்கப்பட்டது போல், லிட்டில் இந்தியாவிலும் ரோச்சோர் பகுதியிலும் உள்ள ஹோட்டல் அறைகளின் கட்டணங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளன.
ஆர்ச்சர்ட், மரினா பே பகுதிகளுக்கு அருகில் உள்ள ஹோட்டல் அறைகளின் கட்டணங்களும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கின்றன.
மரினா பே சாண்ட்சில் உள்ள ஓர் அறைக்கான கட்டணம் $1,199ஆகவும், ‘கொன்ரெட் செண்டினியல்’ல் அது $1,151ஆகவும் உள்ளன.