அடகுக்கடையில் $132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடிவிட்டு, மலேசியாவிற்குத் தப்பிச்சென்ற இருவரைக் கைதுசெய்து காவல்துறை சிங்கப்பூருக்கு அழைத்துவந்தது.
ஜூலை 16ஆம் தேதி மாலை 6.27 மணிக்கு ‘லக்கி பிளாசாவில்’ திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.
48 வயது ஆடவர் ஒருவர் அடகுக்கடையிலிருந்து வைர மோதிரத்தை திருடிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். அவரையும் அவருக்கு உதவியாக இருந்த 58 வயது ஆடவரையும் கண்காணிப்புப் படக்கருவி உதவியுடன் அடையாளம் கண்டு, தங்ளின் காவல்துறை அவர்களைத் தேடத் தொடங்கியது.
காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட ஒருமணி நேரத்திற்குள் இருவரும் மலேசியாவிற்குத் தப்பிச்சென்றுவிட்டனர்.
ஜூலை 17ஆம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் அவர்களுக்குக் கைது உத்தரவுப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து ஜூலை 19ஆம் தேதி மலேசியக் காவல்துறை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவர்களைக் கைதுசெய்து, மறுநாள் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

