மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் வெஜிடாக் சைவ இறைச்சி ரெண்டாங் கறி, வறுத்த பொன்னிற சைவ வாத்து ஆகிய இரு தயாரிப்புகளிலும் குளூட்டன் இருப்பதாக விவர முத்திரையில் தெரிவிக்கப்படாததால் அவற்றைத் திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு தயாரிப்புகளிலும் குளூட்டன் இருப்பதை முத்திரையில் குறிப்பிடுமாறு அவற்றை இறக்குமதி செய்யும் வெஜிடாக் உணவு விநியோக நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உணவு ஆணையம் உத்தரவிட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி காலாவதியாகும் இறைச்சி ரெண்டாங் கறியும், அடுத்த ஆண்டு ஜூலை 15ம் தேதி காலாவதியாகும் வறுத்த வாத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் உணவு விதிமுறைகளின்கீழ், ஒவ்வாமைகள் ஏற்படுத்தக்கூடிய உட்பொருள்கள் விவர முத்திரைகளில் குறிப்பிடப்படவேண்டும்.
பொட்டல உணவுகளில் சேர்க்கப்படும் அனைத்துப் பொருள்களும் முத்திரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
குளூட்டன் என்பது கோதுமையிலும் மற்ற தானியங்களிலும் இயற்கையாக இருக்கும் ஒருவகைப் புரதம். பெரும்பாலோரை இது பாதிக்காதென்றாலும், ஒவ்வாமை உள்ளவர்கள் பாதிக்கப்படலாம்.
இவ்விரு தயாரிப்புகளையும் வாங்கியவர்களில் குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் அவற்றைச் சாப்பிடவேண்டாமென ஆலோசனை கூறப்படுகிறது.