தம்முடைய சொந்த அண்ணனின் 13 வயது மகளுடன் பலமுறை பாலியல் உறவுகொண்ட ஆடவருக்கு 21 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 16 பிரம்படிகளும் விதித்து நீதிமன்றம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவு காரணமாக, அந்த 38 வயது குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை. பாலியல் அத்துமீறல், சிறுமியுடன் தாம் நெருக்கமாக இருப்பதைக் காட்டும் அந்தரங்கப் படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
கிட்டத்தட்ட ஈராண்டுகளாக அச்சிறுமியைத் தந்திரமாக ஏமாற்றித் தொடர்பில் வைத்திருந்த அந்த ஆடவர், அவரிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதோடு கொடுமைப்படுத்தும் உபகரணங்களையும் பயன்படுத்தினார்.
அச்சிறுமி குறைந்தது எட்டுத் தருணங்களிலாவது அந்த ஆடவருடனான உறவை முறிக்க முயன்றார். எனினும், ஒவ்வொரு முறையும் சிறுமியின் மனத்தை உருகவைக்கும் வகையில் பேசி, உறவை முறித்துக்கொள்ள விடாமல் அந்த ஆடவர் தடுத்தார்.
பின்னர், அச்சிறுமி தம் பள்ளியின் சக மாணவருடன் பழகத் தொடங்கியபோது, பொறாமை கொண்ட அந்த ஆடவர், அச்சிறுமியின் அந்தரங்கப் படங்களையும் காணொளிகளையும் ஆபாச இணையத்தளத்தில் பதிவேற்றப் போவதாக மிரட்டினார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்குத் தம்பியாவார்.

