பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் மயக்க நிலையில் இருந்த சமயம் அவருடைய உடைமைகளைத் திருடிய 55 வயது ஆடவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கேலாங் சாலையிலுள்ள ஒரு விடுதியில் நடந்த இச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் இரவு போலிசாருக்குப் புகார் அளிக்கப்பட்டது. புதன்கிழமை விடியற்காலை இரண்டு மணிக்குச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
கூறப்பட்ட அங்க அடையாளங்களைக் கொண்டு பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் ஆடவரை அதே நாளில் சுல்தான் பிளாசாவில் அடையாளம் கண்டு கைது செய்தனர். ரொக்கம், கைத்தொலைபேசிகள், நகைகள் ஆகியவையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இதுபோன்று அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து புகார் செய்யப்பட்ட மேலும் சில குற்றச் சம்பவங்களில் கைதான ஆடவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலிசார் நம்புகின்றனர்.

