ஒன்பது வயதான சிறுவனை 2016ஆம் ஆண்டில் மின்தூக்கியில் மானபங்கப்படுத்தியதன் தொடர்பில் சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் தண்டனையைப் பூர்த்தி செய்த இரு மாதங்களில் 21 வயதான அந்த ஆடவர் ஆறு வயதுச் சிறுவனான தமது சகோதரியின் மகனுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தார். அத்தகைய இரு சம்பவங்களை ஒப்புக்கொண்ட அந்த இளையருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
முந்தைய குற்றத்துக்காக சீர்திருத்தப் பள்ளியில் இருந்த அவர், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் விடுதலையானார். மே மாதத்தில் தமது சகோதரியின் மகனிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதை சிறுவனின் பெற்றோர் கையும் களவுமாகப் பிடித்ததை அடுத்து போலிசில் புகார் செய்யப்பட்டது. அந்த இளையர் மீண்டும் தவறுகள் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மன நலக் கழகத்தின் அறிக்கை தெரிவிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். தாம் நடந்துகொண்டதற்கு தமது சகோதரியிடம் மன்னிப்புக் கோருவதாக அந்த ஆடவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

