குட்டித் தூக்கங்களால் பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே (படம்), சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியான் கூட்டம் தொடர்பிலான பல்வேறு சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்ததை அடுத்து "அவ்வாறு தூங்கியதில் என்ன தவறு" என செய்தியாளர்களிடம் நேற்றுக்காலை அவர் கேட்டார். முழுமையாக ஓய்வெடுத்தாரா என்ற கேள்விக்கு திரு டுட்டர்டே "இன்னும் இல்லை. ஆயினும் இனி வரும் நாட்களைச் சமாளிக்க இந்த ஓய்வு போதுமானது," என்று பதிலளித்தார்.
வருடந்திர ஆசியான் கூட்டத்தில் திரு டுட்டர்டே பல்வேறு உலகத் தலைவர்களுடன் கலந்துகொள்கிறார். ஆயினும் நேற்று முன்தினம் அவர் கலந்துகொள்ள வேண்டிய 11 சந்திப்புகளில் நான்குக்குச் செல்ல தவறினார். மேலும், பிரதமர் லீ சியன் லூங் ஏற்பாடு செய்திருந்த இரவு உணவு விருந்தில் திரு டுட்டர்டே கலந்துகொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை இரவில் திரு டுட்டர்டே மூன்று மணி நேரம் மட்டும் உறங்கியதாக அவரது அலுவலகம் தெரிவித்தது. "தூக்கப் பற்றாக்குறையால் திரு டுட்டர்டே குட்டித் தூக்கம் போட்டதை சிலர் பெரிதுபடுத்துகின்றனர். இதற்கும் அவரது உடல் நலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை," என்று அதிபரின் பேச்சாளர் செல்வடோர் பனெலோ தெரிவித்தார்.

