பாலியல் ரீதியான இன்பத்தைப் பெறும் வகையில் மற்றவர்களின் அந்தரங்கத்தை ரகசியமாகப் பார்த்த குற்றத்திற்காக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) 22 வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தச் சம்பவம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குக் காவல்துறை பதிலளித்தது.
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு 7.30 மணியளவில் 66 நன்யாங் கிரசென்ட் பகுதியிலிருந்து உதவி கேட்டு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அங்குச் சென்ற அதிகாரிகள் 22 வயது இளையரைக் கைது செய்ததாகவும் காவல்துறை கூறியது.
இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.
காவல்துறை குறிப்பிட்ட முகவரியில் பன்யான் ஹால் உள்ளது.
இரவு 8.30 மணியளவில் ‘என்எச் ஜிம்’ உடற்பயிற்சிக் கூடப் பகுதியில் ஐந்துப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆடவர் ஒருவரைச் சோதனையிடுவதைக் கண்டதாக ‘ரெடிட்’ சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
என்டியு வளாகத்தில் உள்ள ‘நார்த் ஹில் ஜிம்’ என்னும் உடற்பயிற்சிக் கூடத்தை அவர் ‘என்எச் ஜிம்’ என்று குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.
மாணவர்களும் ஊழியர்களும் பயன்படுத்தக்கூடிய அந்த உடற்பயிற்சிக் கூடம் ‘பின்ஜாய் ஹால்’ பகுதியில் அமைந்துள்ளது.
பின்ஜாய் ஹால் மற்றும் பன்யான் ஹால் ஆகிய இரண்டும் பல்கலைக்கழகத்தின் ‘நார்த் ஹில் ஹால்ஸ்’ வளாகத்தின் ஒரு பகுதியாகும்.
மற்றொரு ‘ரெடிட்’ பயனர், அன்றிரவு 7.30 மணி முதலே பாதுகாப்பு அதிகாரிகள் அங்குக் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
