ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங், செங்காங் நகர மன்றங்களில் பணிபுரிந்த மூத்த திட்ட மேலாளர் ஒருவர், மூன்று நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளிடமிருந்து $220,000 லஞ்சம் பெற ஒப்புக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
63 வயது பூவா ஜிம் சுவான், நகர மன்றங்களின் நிர்வாக முகவரான இஎம் சர்வீசஸ் நிறுவனத்தில் மூத்த திட்ட மேலாளராகச் செயல்படும்போது குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இங் லீ பெங் (62), லிம் கியான் கூன் (64), யாப் வீ காங் (66), ஆகியோரிடம் லஞ்சம் பெறப் பூவா ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் சிங்கப்பூரர்கள்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2020 மார்ச் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நகர மன்றம் தொடர்பான பொறுப்புகளில் இருந்தபோது லஞ்சம் வாங்கியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில், யாப் பாரகன் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். சியா & லிம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் லிம் இயக்குநராக இருந்தார்.
எம்சிஇ கான்ட்ராக்ட் சர்வீசஸ், ஜே&எம் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் இங் இயக்குநராக இருந்தார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) பூவா மீது நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளும், குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய பலன்களைப் பயன்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இங் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளும், யாப், லிம் மீது தலா ஓர் ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை செப்டம்பர் 18ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


