தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 2A கட்டத்தின் இரண்டாம் நாளுக்குள், மொத்தம் 23 பள்ளிகள் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றன.
தெம்பனிசில் உள்ள கொங்ஷாங் தொடக்கப் பள்ளிக்கு ஆக அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. அந்தப் பள்ளியில் 46 இடங்களுக்கு 143 விண்ணப்பங்கள் வந்தன.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள பிரின்செஸ் எலிசபெத் தொடக்கப் பள்ளியில் எஞ்சியிருந்த 53 இடங்களுக்கு 84 விண்ணப்பங்கள் வந்தன.
சிராங்கூனில் உள்ள ரோசைத் தொடக்கப்பள்ளி, மீதமிருந்த 75 இடங்களுக்கு 115 விண்ணப்பங்களைப் பெற்றது.
2A கட்டம், இதற்கு முன்னர் பள்ளியில் பயின்ற பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கானது. பள்ளியில் ஆலோசனை அல்லது நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கும் பெற்றோரைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கும் அது பொருந்தும்.
கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்தக் கட்டத்தின்கீழ் பதிவுசெய்யலாம்.
2A கட்டத்திற்கான பதிவு சென்ற வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.