சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 17ஆம் தேதி) புதிதாக 24 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்களையும் சேர்த்து இதுவரை கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 59,083 ஆகக் கூடி இருக்கிறது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 19 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
சமூகத்தைச் சேர்ந்த நால்வரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியைச் சேர்ந்த ஒருவரும் புதிதாக கிருமி தொற்றியோரில் அடங்குவர் என்று சுகாதார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை உள்ளூரில் ஒருவருக்கு மட்டும் கொவிட்-19 தொற்றியதாகவும் அவர் 57 வயது சிங்கப்பூரரான குடும்ப மாது என்றும் அமைச்சு குறிப்பிட்டு இருந்தது.
வியட்னாம் செல்வதற்காக புதன்கிழமை பயணத்துக்கு முந்தைய பரிசோதனை நடத்தப்பட்டபோது அவருக்கு கிருமித்தொற்று இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவர் மருத்துவ வாகனத்தில் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திற்குச் சென்றார்.
தொற்றுடன் கூடிய நோயாளிகள் சென்று வந்த இடங்களைத் தெரிவிக்கும் பட்டியலில் வெள்ளிக்கிழமை மேலும் பல இடங்களை அமைச்சு சேர்த்தது.
டௌன்டவுன் ஈஸ்ட், செங்காங்கில் இருக்கும் 'கொம்பஸ் 1' கடைதொகுதி, கிரௌன் பிளாசா ஹோட்டல் @ சாங்கி விமான நிலையம், பாசிர் ரிஸ்ஸில் உள்ள ஒயிட் சேண்ட்ஸ் கடைதொகுதி, ராஃபிள்ஸ் சிட்டி கடைதொகுதி ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்ட இடங்கள்.
வெள்ளிக்கிழமை வெளிநாடுகளில் இருந்து வந்த 29 பேருக்கு கிருமித்தொற்று இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்தது. அவர்களில் பங்ளாதேஷ், இந்தியா, மியன்மார் நாடுகளில் இருந்து வந்த 13 வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்களும் அடங்குவர். ஐவர் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாவில் இருந்து திரும்பிய ஒரு சிங்கப்பூரரும் ஐந்து நிரந்தரவாசிகளும் மற்றவர்கள்.
வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜப்பானில் அவசரநிலை காலம் நடப்பில் இருக்கும் வரை சிங்கப்பூர்-ஜப்பான் பரஸ்பர பயண ஏற்பாட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்கும் என்று அமைச்சு கூறியது.
வெள்கிக்கிழமை 14 பேர் குணமடைந்தனர். அவர்களையும் சேர்த்து கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,756 ஆகியது.
மருத்துவமனையில் 51 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். யாரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இல்லை.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 29 பேர் மரணம் அடைந்துவிட்டார்கள். அந்தத் தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.