துவாஸ் வட்டாரத்தில் உள்ள கப்பல் பட்டறை ஒன்றில் 24 வயது ஊழியர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த ஆடவர் துருப்பிடிக்காத எஃகு குழாய் ஒன்றில் சுயநினைவின்றிக் காணப்பட்டதாக அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 9) குறிப்பிட்டது.
துவாஸ் சவுத் புலவார்டில் உள்ள சீட்ரியம் நிறுவனத்தின் கப்பல் பட்டறையில் சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்திய மனிதவள அமைச்சு, அதுகுறித்து விசாரிப்பதாகச் சொன்னது.
கப்பல் ஒன்றின் 28 அங்குல அளவுள்ள எஃகுக் குழாயில் பற்றவைக்கும் வேலை பார்த்த ஊழியர், சுயநினைவின்றி அதற்குள் காணப்பட்டதாக அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
அதையடுத்து, குழாயிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட ஆடவர், சம்பவ இடத்தில் மாண்டதை உதவி மருத்துவர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
மாண்டவர், ஹுவா லியோங் ஆஃப்ஷோர் எஞ்சினியரிங் நிறுவனத்தின் ஊழியர்.
வேலையிடங்களில் மூடப்பட்ட அனைத்து இடங்களையும் தெளிவாக அடையாளம் காண, பாதுகாப்புக் குறியீடுகளை ஒட்டிவைப்பது கட்டாயம் என்று அமைச்சு சுட்டியது.
ஒவ்வொரு பணியும் தொடங்கும்முன் அது எந்த அளவு ஆபத்தானது, அந்த வேலையிடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்கிறதா போன்ற பல்வேறு அம்சங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அது நினைவூட்டியது.

