வரும் மே 27ஆம் தேதி கொண்டாடப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக, பெண் தொழுகையாளர்கள் உட்பட, மூன்று தொழுகை அமர்வுகள் வரை ஏறத்தாழ 240,000 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாருல் குஃப்ரான் பள்ளிவாசலில் நடைபெறும் முதல் அமர்வைத் தவிர, மற்றவற்றுக்கு முன்பதிவு தேவையில்லை என முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், புதன்கிழமையன்று (மே 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெம்பனிசில் அமைந்துள்ள தாருல் குஃப்ரான் பள்ளிவாசல், சிங்கப்பூரின் மிகப்பெரிய பள்ளிவாசலாகும்.
தொழுகையாளர்கள் மே 22ஆம் தேதி காலை 10 மணி முதல் book.masjids.sg என்ற இணையத்தளம் வழியாகத் தங்களது தொழுகை இடங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தாருல் குஃப்ரான் பள்ளிவாசல் தொழுகையில் கலந்துகொள்பவர்கள், மேலும் வசதியான அனுபவத்தைப் பெறுவதற்காக அதன் இரண்டாவது தொழுகை அமர்வைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என முயிஸ் கூறியது.
“இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழுகை அமர்வுகளில் பொதுவாகக் கூட்ட நெரிசல் குறைவாக இருக்கும். மேலும், அவை சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள், வயதான தொழுகையாளர்கள் மற்றும் பள்ளிவாசல் வசதிகளை எளிதில் அணுக வேண்டியவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம்,” என்று முயிஸ் மேலும் கூறியது.
கூடுதலாக, 44 கூடுதல் இடங்களில் 20,300 தொழுகை இடங்கள் கிடைக்கும். இது 2025ஆம் ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கூடுதல் இடங்கள், வயதான தொழுகையாளர்களுக்கும், நடமாடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கும், அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தொழுகை மேற்கொள்ளும் இடங்களுக்கு வசதியான அணுகலை வழங்கும்.

