சிங்கப்பூரின் பானத் தயாரிப்பு நிறுவனமான இயோ ஹியாப் செங் (Yeo’s), தனது ஊழியரணியில் 25 பேரை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
தனது பானக் கலன் (கேன்) உற்பத்திப் பணிகளை மலேசியாவில் ஒருங்கிணைக்கும் பொருட்டு, செனோகோவில் இயங்கி வரும் ஆலையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவதாக அந்நிறுவனம் கூறியது.
சிங்கப்பூர் பங்குச் சந்தையில் அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) தாக்கல் செய்த ஓர் அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மலேசியாவின் ஜோகூரிலும் சிலாங்கூரிலும் செயல்பட்டு வரும் தனது ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் அவற்றின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை உதவும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
அதேவேளை, தற்போதைய செனோகா ஆலை, தனது குழுமத்தின் தலைமையகமாகவும் சிறிய அளவிலான உற்பத்தி மையமாகவும் தொடர்ந்து செயல்படும் என்றும் யோ ஹியாப் செங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

