சீனக் குடிமகன் வாங் பாவ்சனுக்கு 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள மூன்றாவது நபர் அவர்.
அந்தப் பணமோசடி தொடர்பான விசாரணை 2021ஆம் ஆண்டில் தொடங்கியது.
32 வயதான அவர், $8 மில்லியன் வெள்ளி பெறுமான சொத்துகளைத் திரும்பக் கொடுத்துவிட்டார். அவை வெளிநாடுகளில் செய்யப்பட்ட சட்டவிரோதச் சூதாட்டக் குற்றச்செயல்களிலிருந்து கிடைத்தவை என்று நம்பப்படுகிறது.
சிறைத்தண்டனை காலத்தில் மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படும் என்பதால், வாங் பாவ்சன் மே மாதத் தொடக்கத்தில் விடுதலை செய்யப்படலாம்.
பாவ்சன் ஏப்ரல் 16ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மற்ற ஆறு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கூட்டுரிமை வீடு ஒன்றை வாங்கும் நோக்கில், அதன் விலையில் 10 விழுக்காட்டைச் செலுத்த, ‘ஹோர்னட் பீ இண்டர்நேஷனல் டிரேடிங்’ என்ற நிறுவனத்திலிருந்து $1.4 மில்லியனுக்கும் மேல் பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
அதோடு, சிங்கப்பூரில் உள்ள ‘எச்எஸ்பிசி’ வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட $600,000 வைத்திருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். அந்தப் பணம் சட்டவிரோதச் சூதாட்டக் குற்றச்செயல்களிலிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.