உட்லண்ட்ஸ் லிங்கில் மே 23ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 5,450 அட்டைப் பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பிடிபட்டன.
அவற்றின் தொடர்பில் 590,626 வெள்ளி பொருள், சேவை வரி ஏய்க்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மூன்று ஆடவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வயது 20, 38, 39 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடவர்கள் ஒரு வேனில் இருந்தபோது அவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வேனில் 1,250 பெட்டிகளில் தீர்வை, வரி செலுத்தாத சிகரெட்டுகள் இருந்தன. மேலும் கள்ள சிகரெட்டுகள் விற்றதன் மூலம் கிடைத்த 26,404 வெள்ளி ரொக்கமும் அவர்களிடம் இருந்தது.
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்தில் நிற்கும் லாரியில் சிகரெட்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
லாரியை அடையாளம் கண்ட அதிகாரிகள் அதற்குள் இருந்த வரி செலுத்தாத 4,200 சிகரெட்டு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
ஆடவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ வரி ஏய்க்கப்பட்ட தொகையைப் போல 40 மடங்கு அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.