மத்திய விரைவுச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) நான்கு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று மாதக் குழந்தை உட்பட ஐவர் காயமடைந்தனர்.
பிராடல் வெளிவழி, ஆஸ்திரேலிய அனைத்துலகப் பள்ளிக்கு அருகே, ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையின் இரண்டு தடங்களில் நான்கு கார்கள் நின்றிருந்ததைத் தனக்குக் கிடைத்த காணொளி காட்டியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
அவ்விடத்தில் குறைந்தது இரண்டு இழுவை வாகனங்கள் காணப்பட்டன. நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் அங்கிருந்தனர்.
இவ்விபத்து குறித்து நண்பகல் 12.20 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காயமுற்ற ஐவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவ்வாகனங்களில் ஒன்றின் ஓட்டுநரான 38 வயது ஆடவரும் அதிலிருந்த நான்கு பயணிகளும்தான் அந்த ஐவர் எனக் கூறப்பட்டது. அவர்கள் மூன்று மாதத்திலிருந்து 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை குறிப்பிட்டது.
விபத்து தொடர்பில் காவல்துறை விசாரித்து வருகிறது.