கைப்பேசி மூலம் வாக்குவாதம் முற்றியதால் பிடித்த பெண்ணின் காதலனைப் பார்க்க ஆயுதம் எடுத்துச்சென்ற வெளிநாட்டு ஊழியருக்கு மூன்றுமாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹூசைன் முகமது அகித் என்ற அந்த 27 வயது பங்ளாதேஷி ஊழியர் கட்டுமானத்துறையில் வேலை செய்பவர்.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஹூசைன் கைப்பேசி மூலம் தமக்கு பிடித்த பெண்ணின் காதலரான கான் முகமது ஆஷிக்கிடம் பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஹூசைனும் ஆஷிக்கும் நேரில் சந்திக்க முடிவெடுத்தனர்.
ஆஷிக் தமது நண்பரையும் அழைத்து சென்றுள்ளார்.
ஹூசைன் வீட்டில் இருந்து பெரிய வெட்டு கத்தியையும் சமையல் கத்தி ஒன்றையும் தமது ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச்சென்றுள்ளார்.
சிம் லிம் ஸ்கொயருக்கு பின்னால் சந்தித்துக்கொண்ட மூன்று பங்ளாதேஷி ஊழியர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஆடவர்கள் சண்டையிடுவதைக் கண்டவர்கள் அவர்களைப் பிரித்தனர்.
அப்போது ஹூசைன் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கண்ட ஆஷிக்கின் நண்பர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ஹூசைன் காவல்துறை அதிகாரிகளால் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
ஆடவர் ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் பொது இடங்களில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பொது இடங்களில் ஆயுதங்கள் எடுத்துச் சென்றால் 2 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.