கிங் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள ஒரு வீட்டில் 4.3 மி. வெள்ளி மதிப்புள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் மூன்று பேர் மீது புதன்கிழமை (மே 8) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் பழனியப்பன், 31, முகமது ஹமிடோன் அகமது, 47 மற்றும் முகமட் ஹஷிம் இஸ்மாயில், 49 ஆகிய மூவரும் மலேசியர்கள்.
ஏப்ரல் 18ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பாராங் கத்திகள் மற்றும் பேஸ் பால் மட்டைகளுடன் ஆயுதம் ஏந்தி 11 பேரை கொள்ளையடித்த குழுவின் ஒரு பகுதியாக இருந்த அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது.
டன்யர்ன் சாலைக்கு அருகில் உள்ள வீட்டில் சூதாட்ட அமர்வின்போது கொள்ளை நடந்ததாக நம்பப்படுகிறது. கைக்கடிகாரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள், சிங்கப்பூர் வெள்ளி, வெளிநாட்டுப் பணம், மின்னிலக்க நாணயங்கள் போன்றவற்றை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அவர்களில் மேலும் இரண்டு மலேசியர்களான கோ போன் டோங், 28, முகமது தவ்ஃபிக் அகமது ஃபவுஸி, 32, ஆகியோர்மீது கொள்ளையடித்த குற்றத்திற்காக மே 2ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் இருவரும் மலேசியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.