செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்வு ஒன்றில் சாப்பிட்ட முப்பது பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவம் செப்டம்பர் 3ஆம் தேதி நடந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது கூறியது.
இருப்பினும், மணமகள் உட்பட பாதிக்கப்பட்டோரில் எவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று அது தெரிவித்தது.
சுகாதார அமைச்சுடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக அமைப்பு கூறியது.
உணவு தயாரிக்கும் முறையின் தொடர்பில் ஹோட்டலின் சுகாதார அதிகாரி நடத்தும் சோதனையும் விசாரணையில் அடங்கும் என்று பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணையின் தொடர்பில் அதிகாரிகளுடன் ஹோட்டல் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் சொன்னார்.
“எங்கள் ஹோட்டல், சுகாதாரத்தையும் தூய்மையையும் மிகக் கடுமையாக எடுத்துக்கொள்கிறது. விருந்தினர்களின் நலனுக்கு நாங்கள் முன்னுரிமையை வழங்குகிறோம். திருமணத் தம்பதிக்குத் தேவைப்படக்கூடிய ஆதரவையும் பராமரிப்பையும் வழங்க, நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்,” என்று பேச்சாளர் கூறினார்.
நச்சுணவு பாதிப்புக்கான அறிகுறிகளில் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தசை வலி, சோர்வு உள்ளிட்டவை அடங்கும் என்று தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதிப்பொருள்கள், நுண்ணுயிர்கள் அல்லது நுண்ணுயிர் நச்சுகள் கலந்த உணவுகளை உண்டால் நோய் ஏற்படக்கூடும். உட்கொள்ளப்பட்ட நச்சுணவின் அளவைப் பொறுத்து, அறிகுறிகள் சில மணி நேரம் அல்லது சில நாள்கள் நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.