சிங்கப்பூரில் பணமோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மொத்தம் 348 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் 15க்கும் 79 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் $13.2 மில்லியனுக்கும் மேல் இழந்த மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் கூறினர்.
235 ஆடவர்களும் 113 பெண்களும் 1,400க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. வேலை, முதலீடு, அரசாங்க அதிகாரிகளைப் போல் செயல்படுவது, மின் வர்த்தகம், இணைய மோசடிகள் முதலியவை அவற்றில் அடங்கும்.
வர்த்தக விவகாரப் பிரிவையும் ஏழு காவல்துறை நிலப் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் இரண்டு வாரங்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது அல்லது உரிமமின்றி கட்டணச் சேவைகளை வழங்கியது போன்ற குற்றங்களின் தொடர்பில், சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுவரை சிறைத்தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

