சிங்கப்பூருக்குள் 36 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் போர்ச்சுக்கீசிய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இம்மாதம் (ஏப்ரல்) 14ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் அவர் பிடிபட்டார்.
25 வயது போர்ச்சுக்கீசியர் அடுத்த நாள் இங்கிருந்து புறப்படத் திட்டமிட்டிருந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
கே-9 காவல்துறை அதிகாரிகள் இரண்டாம் முனையத்தில் அவரின் பயணப் பெட்டிகளைச் சோதனையிட்டனர்.
கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள்கள் அடங்கிய பல பொட்டலங்கள் ஆடவரின் பெட்டியில் இருப்பதைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேலும் சில சோதனைகளை மேற்கொண்டனர்.
மொத்தம் 36.3 கிலோ கஞ்சா அடங்கிய 68 பொட்டலங்கள் சிக்கியதாக ஆணையம் தெரிவித்தது.
500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்தாலோ இங்கிருந்து எடுத்துச்சென்றாலோ அவ்வாறு செய்பவருக்கு மரணதண்டனை விதிக்கப்படக்கூடும்.

