சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வாகனத்தை மாற்றி அமைத்ததன் தொடர்பில் மொத்தம் 380 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தீவெங்கும் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகள் மூலம் அவை கண்டறியப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூன் 26ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
மொத்தம் 70 வாகனங்களில் புகையை வெளியேற்றும் சட்டவிரோத கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன என்றும் 80 வாகனங்களில் சரியான விளக்குகள் இல்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
ஃபேஸ்புக்கில் ஆணையம் பதிவேற்றிய புகைப்படத்தில் புகையை வெளியேற்றும் சட்டவிரோத கருவியும் சரியான எண் பலகை இல்லாத ஒரு மோட்டார்சைக்கிளைக் காண முடிகிறது.
மற்றொரு படத்தில், லேசர் கதிர் பொறிக்கப்பட்ட எண் பலகையைக் கொண்ட பிஎம்டப்புள்யூ காரைக் காண முடிந்தது.
லேசர் கதிர்களால் பொறிக்கப்பட்ட எண்களைப் பலகைகளில் சரிவர காண முடியாது என்று ஆணையம் குறிப்பிட்டது.
வாகனங்களில் சட்டவிரோதமாக செய்யப்படும் மாற்றங்களுக்கு $20,000 வரை அபராதம், ஈராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
111 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல்
இதனிடையே, நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர்க் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட ஒன்பது நாள் சோதனை நடவடிக்கைகளில் 111 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் தொடர்பில் 250 குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மின்ஸ்கூட்டர்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
ஜூன் 1ஆம் தேதி அந்த நடவடிக்கைகள் தொடங்கின என்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், நகர மையங்கள், குறிப்பிட்ட குடியிருப்பு வட்டாரங்கள் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன என்றும் ஆணையம் சனிக்கிழமை (ஜூன் 27) ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்தது.
விதிமுறைகளுக்குப் பொருந்தாத மின்ஸ்கூட்டர்களை வைத்திருந்தது, முறையற்ற, தெளிவில்லாத, சேதமடைந்த பதிவெண் பலகை பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இதுவரை, விதிமுறைகளுக்கு உட்படாத 600க்கும் மேற்பட்ட உந்து நடமாட்டச் சாதனங்களை ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

